Thursday, September 15, 2016

பிள்ளையார் காதல்


இன்னும் படபடக்கும் இதயம் அடங்கவில்லை ,
கண்கள் இன்னும் தெளியவில்லை ,
வியர்வையினூடே கிசுகிசுத்தாள்

வழிப்பசிக்கு முத்தங்கள்
கட்டித் தருகிறேன்
போய் உலகம் வென்றுவாவென்றாள்.

என் உலகமே நீதான்
வென்று சில நிமிடங்கள் ஆகிறது,
களிப்பில் இளைப்பாறுகிறேன்.

அந்தக்  கண்களில் மொழிபெயர்பு ...
இனி பழம் கிடைக்கப்போவதில்லை

-ஷ்ரவன்

Friday, September 9, 2016

அவ்வண்ணமே அமையட்டும் அம்மணம்

விரச எல்லை தாண்டிவிட்ட விரகம் ,
நாகரீக எல்லை தாண்டிவிட்ட அசிங்கமான கோபம் ...
....
....
....

உடைமட்டுமல்ல
ரசனையும் சுமைதான்,

சிகரத்தின் அடிவாரத்தில்
கழற்றிவிட்ட ரசனை
புள்ளியாய் தெரிகிறது.
உயிர் காக்க தேவையொன்றுமில்லை
உயிர் மட்டும் பிடித்துக்கொண்டு
உச்சி தொட்டுவிட தவழும்
மலையேறியின்
வெறிதான் எனக்கும்.

கொடுக்க காதலும் முத்தமும்
தீர்ந்தாயிற்று,
துரோகிக்கு தரும்
கற்பனைத் தண்டனைகள் மட்டுமே
மீதியிருக்கிறது.

சத்தமும் ரத்தமும்
போர் வண்ணமாய் ...

விசும்பல் சத்தம்
வெற்றியின் பாதையில்
போர் செல்லுவதை தெரிவிக்கிறது.

உன் விசும்பல் எனக்கும்
என் வெறி உனக்கும்
அவரவர் வெற்றிகள்.

வலுவின்மை தரும்
இயலாமை,
அம்மண நிலையிலும்
அவமானம்.

என் மானத்தை
கோட்டுமேட்டிலோ? காலிடிக்கிலோ?
புதைத்தாலோ 

கொஞ்சலில் ஆரம்பமாகி,
மண்டியிட்டு கெஞ்சும் என் சொல்லிலோ,

காக்கவிட்டு , தவிக்கவிட்டு
ஏறு கணத்தில் ,சீறு சினதிற்கு
பிச்சையாய் நீ தரும்
புன்னகை தருணத்திலோ

உன் பழிவெறி தீருமாயின்
அவ்வண்ணமே அமையட்டும் நம் அம்மணக் கோலம்.

-ஷ்ரவன்

பார்த்ததும் தெளிந்ததும்

முந்தானை நழுவாதிருக்க ஒரு ஊசி ,
இடுப்பு தெரியாதிருக்க ஒரு ஊசி ,
மறைக்க வேண்டுமானால்
உன் முகத்தையெல்லவா
மறைத்திருக்க வேண்டும்.

கூரில்லா முட்டாளா இவள்.

வெட்கத் தருணங்களில் 
முகம் மறைத்துக் கொள்ளும்போது
தெளிகிறது

எல்லாம் தெறிந்தேதான் செய்திருக்கிறாள்
சூச்சமக்காரி..

-ஷ்ரவன்

Wednesday, August 31, 2016

எச்சரிக்கை

ஒவ்வொரு வாசிப்பும்
ஒரு கண் திறந்து வைக்கிறது.

அந்தச் சல்லடைக்கண் ,
தீது நன்று பிரிப்பதற்காவதில்லை 
தேர்வன தேர்ந்தெடுக்க.

சில புத்தகங்கள்
கண் திறப்பதில்லை
பெரிய ஓட்டை போட்டுச் செல்கிறது.
அவற்றை அவ்வாறே
உள்வாங்கிட தன்மை செய்கிறது.

பக்கவிளைவு
சுயமிழத்தல்!!!!
அல்லது
சுயம் தங்கள் ஆண்குறி
அளவு சுருங்கி விடும் வாய்ப்புண்டு.

ஓட்டையின் அளவளந்து ,
தட்டென்றோ ,
சல்லடையென்றோ ,
வளையமென்றோ
அழைக்கப்படலாம்.

-ஷ்ரவன்


மதிய மழை

கொட்டும் மழையில்
தேன் இருக்குது பாரடா

என் கண்கள்
இனிக்குது
சத்தியம் தானடா

இந்த மேகம்
இன்னும் தூரம்
போக வேணும் ,

அதிரவிடும் கச்சேரி
எனக்கும் மட்டும் இல்லை மானிடா 

கண்ணெல்லாம் சிரிக்க
நாமெல்லாம் களியாட்டம்
போட்டா போதுமடா

இயற்கை நன்றி சொல்லி போகுமடா ..

-ஷ்ரவன்

Tuesday, August 30, 2016

வேலியிட்ட இடுகாடு

என்னை அம்மணமாக்கி
முச்சந்தியில் நிறுத்திவிடும்
என்ற பயத்தில்

பல
சொற்களை  , வரிகளை  , கவிதைகளை
கல்லறை கூட நடாமல்
ஆழமாய் புதைத்துவிட்டு
பெருமூச்சுவிடுகிறேன்.

-ஷ்ரவன்

துணைவி

ஒருமை தெளியா மயக்கம் ..
எப்போதும் போல் தாங்கிட
தமிழ் மட்டும்.

-ஷ்ரவன்

Monday, August 29, 2016

புதுக்கவிதை

பார்த்ததும் சப்பு கொட்டிட வைக்கும்
அளவாய் புளியை கரைத்து ,

கொதிக்கும் தண்ணீரில்
சிறு பொட்டளவு இருக்கும் பருப்புகளை
கையளவிட்டு,

வெண்பாவின் சீரளவில் ,
குறையாமல் வெட்டிய
இளசான ("இளசான" கிடைக்காவிட்டால் இத்துடன் நிறுத்தி கொள்ளவும் )
முருங்கை சேர்த்து ,

பருப்பு
உடையட்டுமா , குழையட்டுமா
என்று கேட்கும் போது ,

சப்புக்கொட்டியையும் ,

வேதியல் அறியா சில
மந்திரத்தூள்கள் (உப்பு உள்ளடக்கம் )
சேர்த்து ,

அளவெல்லாம் தேவதைகள் அறிந்தது ,
நமக்குத் தோரயமாய்
போதுமானது ,

வாசம் சொல்லிவிடும் சுவையை
நக்கிப் பார்ப்பது சந்தேகம் ,

காத்திருந்து வரும்
வாசம்
மூளை சென்று
திறந்து வைக்கும்
சொர்க வாசல் ,

வெளி வரும் ஆவி
யாரைப் பிடிக்கவென்று
முடிவெடுக்கும் முன் ,

அப்படியே பழைய சோற்றுக்குள் கொட்டி

அடடே ... ஆச்சர்ய குறி ...

-ஷ்ரவன்


சுத்த்த்த்தம்

இன்று காலை இரு சக்கரம் ஏறிய உடனே ,
பாரதி நினைவில் தொற்றிக் கொண்டான் .

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்..
எதனூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ

"அறிவு கெட்ட நாயே .." திட்டியே விட்டேன்
அவசரமோ ..
அறிவீனமோ ..
அகங்காரமோ ..
குறுக்கே இன்று பாய்ந்ததற்கு பேர்
மகிழுந்து.

கவிதையை முடிக்காமல் இருக்க மனமில்லை ..
இப்போது அடுத்து வரி ஞாபகம் வரவில்லை ..
சிந்தனையும் வண்டியும்
ஒரு சேர பயணம் .

இந்த முறை
அறிவீனம் .. அகங்காரமெல்லாம் இல்லை
அதிர்ச்சி ..
குறுக்கே பாய்ந்தது குழந்தை .

யாரை திட்டலாமென்று ஏத்தனிக்கையில் ..
ஓடி வந்தவள்
"அறிவிருக்கா .. குழந்தை கண்ணுக்கு தெரியலா.."
தப்பு என்னுடையதுதான்
என்று நம்பும்படி இருந்தது அவள் கோபம் ..

பல சிந்தனைகளுக்கு நடுவில்
இன்னும் ஞாபகம் வரவில்லை
அடுத்த வரி.

அலுவலகம் வந்ததும் ..
"அவனவனுக்கு அறிவு வேணும் .. வர்ற நேரத்தை பாரு "

தலை குனிந்து செல்லும் பொது ஞாபகம்
வந்தேவிட்டது
"சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ.."

 -ஷ்ரவன்

Saturday, August 27, 2016

ஞானம்

அன்பிற்கும் அறிவு வேணுமடி தங்கமே தங்கம் ...

பூரணமாய் வளர்ந்துவிட்ட
அன்புக்கும் , அறிவிற்கும்
ஒரு பேர் சொல்லித்தான்
அழைப்பாரடி
தங்கமே தங்கம் ...

--ஷ்ரவன்

Saturday, July 16, 2016

யாதுமானவளே

கவிதைகளெல்லாம் அழகில்லையடி ,
அதற்கு
கருவாய்
உருவாய்
நீ அமைந்த  பின் தான்
உன்மத்தம் ஆகுதடி ...

உவமைகளெல்லாம் உண்ர்ச்சி பெறுவது இல்லை ,
தத்துவமெல்லாம் சிந்தை திறப்பதும் இல்லை,
அதன் உருபொருளாய்
நீ இல்லையெனில் ....

நானுணர்த்த ஒரே  ஞானம் நீயடி ,
நான்
படிக்கும்
படைக்கும்
கவிதைகளெல்லாம்
நீயேதானடி.

-ஷர்வன் 

Sunday, July 10, 2016

யாதுமானவளே

உமையவள் பாதம் பற்றிட
திண்ணம் கொண்டபின் ..

காலமென்ன ..
அதை முடிக்கும்
காலனென்ன

என் சமர் சிவனுடன்.

-ஷர்வன் 

Tuesday, April 26, 2016

பெரு நிலை

இரவின் மடியில்
தனிமைப் பாடல்
முடிந்தபின்

பகலும் மனிதர்களும்
நோயையும் பேயையும்
போல் பீடித்துக் கொள்கிறது

இரவை நோக்கிய
ஏக்கத்தில்
நகர்கிறது
ஒவ்வொரு பகலும் ...

முடிவிலா ஏகாந்த பெருநிலை
நோக்கிய
ஏக்கத்தில்
நகர்கிறது
ஒவ்வொரு இரவும் ...

-ஷர்வன் 

Tuesday, February 9, 2016

கண் மதிப்பு , கையளவு

துளி அலகில்
கடல் அளப்பது போல ,
உன்னழகு வர்ணிக்கும்
என் கவிதை.

தொடுவானம் அளக்கும்
என் கண்கள் கொள்ளா
கையடக்க முடிவிலி நீ.

- ஷர்வன்

Thursday, February 4, 2016

தினக் காரணி

வழிவது
வியர்வையா ?? வெறுப்பா ??
தெரியவில்லை

சற்றியிருக்கும் மனிதர்கள் மேல் 
கோபமா ?? கொலை வெறியா ??
புரியவில்லை

முட்டாள்கள் மத்தியில்
வெறுப்பில் கருகிக் கொண்டிருக்கும்
காலை நேர
சாலை நெரிசலில்
என்னிலை மீட்டுத்தரும்
இதமான வானொலி பாடல் போல்

அலுவலகத்தில் அவள் முகம்

-ஷர்வன்

Thursday, January 28, 2016

வேண்டுதல்

கடந்து சென்ற காலமெல்லாம்
ஒரு நொடியாய் சுருங்கிவிட்டதடி.

நொடியாகிட துடிக்கும் ஏதிர்காலம்
என்முன்னே
முடியாமல் நீளுதடி.

நிகழ்காலம் மட்டும்
எங்கென்று தெரியாமல்
காணாமல் போகுதடி.

நிகழ்வுகளெல்லாம்
உணர்வுகளில் ஊறி ,
அறிவில் உலர்ந்து ,
ஞாபகங்களாய் தங்குதடி.

ஞாபகங்கள்
தினம் தினம் வண்ணம் வெளிறிப்போய்,
வெறும்
எண்ணங்களாய் எஞ்சுதடி.

காலச் சல்லடையில் ,
என் எண்ணத் தண்ணீர் தேக்கி
இருத்தி வைக்கும் முயற்சியில் ,
என் நெஞ்சம் பைத்தியம் ஆகுதடி ..

ஒரு பொழுதேனும்
நிகழ் குற்றுழியில்
என் சித்தம் நிறுத்திடவே
அருளாயோடி ...

-ஷர்வன்

Tuesday, January 5, 2016

சக்தி

இயல்பாய் கழிந்து கொண்டிருந்த
பழகிய பழைய நொடிகளுக்குள்
எப்படியோ புகுந்துவிட்ட அந்த புது விநாடி.

வழிந்தோடும் என் கண்ணீர் மட்டும் சாட்சியாய்
நானும் ஒரு முறை உரக்கக் கூறிவிட்டேன் .
எங்கெங்கு காணினும் சக்தியடா ......

-ஷர்வன்