Monday, August 29, 2016

சுத்த்த்த்தம்

இன்று காலை இரு சக்கரம் ஏறிய உடனே ,
பாரதி நினைவில் தொற்றிக் கொண்டான் .

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்..
எதனூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ

"அறிவு கெட்ட நாயே .." திட்டியே விட்டேன்
அவசரமோ ..
அறிவீனமோ ..
அகங்காரமோ ..
குறுக்கே இன்று பாய்ந்ததற்கு பேர்
மகிழுந்து.

கவிதையை முடிக்காமல் இருக்க மனமில்லை ..
இப்போது அடுத்து வரி ஞாபகம் வரவில்லை ..
சிந்தனையும் வண்டியும்
ஒரு சேர பயணம் .

இந்த முறை
அறிவீனம் .. அகங்காரமெல்லாம் இல்லை
அதிர்ச்சி ..
குறுக்கே பாய்ந்தது குழந்தை .

யாரை திட்டலாமென்று ஏத்தனிக்கையில் ..
ஓடி வந்தவள்
"அறிவிருக்கா .. குழந்தை கண்ணுக்கு தெரியலா.."
தப்பு என்னுடையதுதான்
என்று நம்பும்படி இருந்தது அவள் கோபம் ..

பல சிந்தனைகளுக்கு நடுவில்
இன்னும் ஞாபகம் வரவில்லை
அடுத்த வரி.

அலுவலகம் வந்ததும் ..
"அவனவனுக்கு அறிவு வேணும் .. வர்ற நேரத்தை பாரு "

தலை குனிந்து செல்லும் பொது ஞாபகம்
வந்தேவிட்டது
"சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ.."

 -ஷ்ரவன்

No comments:

Post a Comment