Wednesday, August 31, 2016

எச்சரிக்கை

ஒவ்வொரு வாசிப்பும்
ஒரு கண் திறந்து வைக்கிறது.

அந்தச் சல்லடைக்கண் ,
தீது நன்று பிரிப்பதற்காவதில்லை 
தேர்வன தேர்ந்தெடுக்க.

சில புத்தகங்கள்
கண் திறப்பதில்லை
பெரிய ஓட்டை போட்டுச் செல்கிறது.
அவற்றை அவ்வாறே
உள்வாங்கிட தன்மை செய்கிறது.

பக்கவிளைவு
சுயமிழத்தல்!!!!
அல்லது
சுயம் தங்கள் ஆண்குறி
அளவு சுருங்கி விடும் வாய்ப்புண்டு.

ஓட்டையின் அளவளந்து ,
தட்டென்றோ ,
சல்லடையென்றோ ,
வளையமென்றோ
அழைக்கப்படலாம்.

-ஷ்ரவன்


மதிய மழை

கொட்டும் மழையில்
தேன் இருக்குது பாரடா

என் கண்கள்
இனிக்குது
சத்தியம் தானடா

இந்த மேகம்
இன்னும் தூரம்
போக வேணும் ,

அதிரவிடும் கச்சேரி
எனக்கும் மட்டும் இல்லை மானிடா 

கண்ணெல்லாம் சிரிக்க
நாமெல்லாம் களியாட்டம்
போட்டா போதுமடா

இயற்கை நன்றி சொல்லி போகுமடா ..

-ஷ்ரவன்

Tuesday, August 30, 2016

வேலியிட்ட இடுகாடு

என்னை அம்மணமாக்கி
முச்சந்தியில் நிறுத்திவிடும்
என்ற பயத்தில்

பல
சொற்களை  , வரிகளை  , கவிதைகளை
கல்லறை கூட நடாமல்
ஆழமாய் புதைத்துவிட்டு
பெருமூச்சுவிடுகிறேன்.

-ஷ்ரவன்

துணைவி

ஒருமை தெளியா மயக்கம் ..
எப்போதும் போல் தாங்கிட
தமிழ் மட்டும்.

-ஷ்ரவன்

Monday, August 29, 2016

புதுக்கவிதை

பார்த்ததும் சப்பு கொட்டிட வைக்கும்
அளவாய் புளியை கரைத்து ,

கொதிக்கும் தண்ணீரில்
சிறு பொட்டளவு இருக்கும் பருப்புகளை
கையளவிட்டு,

வெண்பாவின் சீரளவில் ,
குறையாமல் வெட்டிய
இளசான ("இளசான" கிடைக்காவிட்டால் இத்துடன் நிறுத்தி கொள்ளவும் )
முருங்கை சேர்த்து ,

பருப்பு
உடையட்டுமா , குழையட்டுமா
என்று கேட்கும் போது ,

சப்புக்கொட்டியையும் ,

வேதியல் அறியா சில
மந்திரத்தூள்கள் (உப்பு உள்ளடக்கம் )
சேர்த்து ,

அளவெல்லாம் தேவதைகள் அறிந்தது ,
நமக்குத் தோரயமாய்
போதுமானது ,

வாசம் சொல்லிவிடும் சுவையை
நக்கிப் பார்ப்பது சந்தேகம் ,

காத்திருந்து வரும்
வாசம்
மூளை சென்று
திறந்து வைக்கும்
சொர்க வாசல் ,

வெளி வரும் ஆவி
யாரைப் பிடிக்கவென்று
முடிவெடுக்கும் முன் ,

அப்படியே பழைய சோற்றுக்குள் கொட்டி

அடடே ... ஆச்சர்ய குறி ...

-ஷ்ரவன்


சுத்த்த்த்தம்

இன்று காலை இரு சக்கரம் ஏறிய உடனே ,
பாரதி நினைவில் தொற்றிக் கொண்டான் .

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்..
எதனூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ

"அறிவு கெட்ட நாயே .." திட்டியே விட்டேன்
அவசரமோ ..
அறிவீனமோ ..
அகங்காரமோ ..
குறுக்கே இன்று பாய்ந்ததற்கு பேர்
மகிழுந்து.

கவிதையை முடிக்காமல் இருக்க மனமில்லை ..
இப்போது அடுத்து வரி ஞாபகம் வரவில்லை ..
சிந்தனையும் வண்டியும்
ஒரு சேர பயணம் .

இந்த முறை
அறிவீனம் .. அகங்காரமெல்லாம் இல்லை
அதிர்ச்சி ..
குறுக்கே பாய்ந்தது குழந்தை .

யாரை திட்டலாமென்று ஏத்தனிக்கையில் ..
ஓடி வந்தவள்
"அறிவிருக்கா .. குழந்தை கண்ணுக்கு தெரியலா.."
தப்பு என்னுடையதுதான்
என்று நம்பும்படி இருந்தது அவள் கோபம் ..

பல சிந்தனைகளுக்கு நடுவில்
இன்னும் ஞாபகம் வரவில்லை
அடுத்த வரி.

அலுவலகம் வந்ததும் ..
"அவனவனுக்கு அறிவு வேணும் .. வர்ற நேரத்தை பாரு "

தலை குனிந்து செல்லும் பொது ஞாபகம்
வந்தேவிட்டது
"சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ.."

 -ஷ்ரவன்

Saturday, August 27, 2016

ஞானம்

அன்பிற்கும் அறிவு வேணுமடி தங்கமே தங்கம் ...

பூரணமாய் வளர்ந்துவிட்ட
அன்புக்கும் , அறிவிற்கும்
ஒரு பேர் சொல்லித்தான்
அழைப்பாரடி
தங்கமே தங்கம் ...

--ஷ்ரவன்